தமிழக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்கள்...தேர்தலுக்கு 18 நாட்கள்
சென்னை : தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2026க்கான களம் கோடை வெயிலை மிஞ்சும் அளவிற்கு அனல் பறக்க துவங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் அதிக அளவிலான வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதே போல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கு 2 நாள் மட்டுமே...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி துவங்கியது. விடுமுறை நாட்கள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆனால் அடுத்தடுத்து அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்கள் வந்ததால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மிக குறைந்த அவகாசமே அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 04ம் தேதியான இன்றும், ஏப்ரல் 06ம் தேதியான திங்கட்கிழமையும் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்புமனு தாக்கல் கிடையாது. இதற்கு பிறகு ஏப்ரல் 06ம் தேதி தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். ஏப்ரல் 06ம் தேதி பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான அவகாசம் நிறைவடையும். ஏப்ரல் 07ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். ஏப்ரல் 09ம் தேதி மாலை 5 மணி வரை வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 09ம் தேதியன்று மாலை தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற இன்னும் 18 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளதால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. ஒரு புறம் கட்சிகளின் தேர்தல் பிரச்சார வியூக பணிகள், மற்றொரு புறம் பிரச்சார சுற்றுப்பயணங்கள் என தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைவருமே தாங்கள் தான் வெற்றி பெற போவதாக கூறி வருகின்றனர். கருத்து கணிப்புகளும் ஒவ்வொரு விதமான தகவல்களை தந்து கொண்டிருக்கின்றன. இதனால் மக்களின் ஆதரவை பெற போவது யார் என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.