காகங்களில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி...தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Su.tha Arivalagan
Feb 05, 2026,06:45 PM IST

சென்னை : மத்திய அரசு காகங்களில் தீவிரமான H5N1 பறவைக் காய்ச்சல் பரவலை உறுதி செய்ததைத் தொடர்ந்து, தமிழக கால்நடை பராமரிப்புத் துறை மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.


சென்னையின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக காகங்கள் உயிரிழப்பதை அதிகரித்து வருகிறது. ஜனவரி 21, 2026 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட காகங்களின் மாதிரிகளில் H5N1 வைரஸ் இருப்பதை போபாலில் உள்ள ஆய்வுக்கூடம் (ICAR-NIHSAD) உறுதி செய்துள்ளது. இது குறித்து மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.




பறவைகள் இறப்பு பதிவாகும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கவும், உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்த பறவைகளை முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி ஆழமாகப் புதைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இறந்த பறவைகளைத் தொடவோ அல்லது உடற்கூறு ஆய்வு செய்யவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.


கோழிப் பண்ணைகள், வாத்து வளர்ப்பு இடங்கள் மற்றும் இறைச்சிக் கூடங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வனத்துறையினர் வனப்பகுதிகளில் உள்ள பறவைகளைக் கண்காணிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், 'ஒரே ஆரோக்கியம்' (One Health) என்ற அடிப்படையில் கால்நடை, சுகாதாரம் மற்றும் வனத்துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக அரசு இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் பறவைகள் ஏதேனும் அசாதாரணமாக உயிரிழந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.