மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

Su.tha Arivalagan
Aug 28, 2025,06:24 PM IST

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்  டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:




மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைப் பணியாளர்களில் 15.24% பேருடன், தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதாவது, நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5-6% மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு, நாட்டின் ஒவ்வொரு ஆறு தொழிற்சாலைப் பணியாளர்களில் ஒருவரைக் கொண்டுள்ளது.


மேலும், 40,100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் (நாட்டின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43%), தமிழ்நாடு மீண்டும் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது.


எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்களுக்கும், அவர்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் இதுவே சிறந்த பதிலடி. நம்முடைய தரவுகளின்படி மட்டுமல்ல, மத்திய அரசின் தரவுகளின்படியும் இது தெளிவாகிறது.


மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ், தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த வளர்ச்சியின் மையமாக உற்பத்தித் துறை தொடர்ந்து இருந்து வருகிறது. தொழில் துறை முதலீட்டு ஊக்குவிப்புத் துறை, தமிழ்நாட்டுக்கு வேலைவாய்ப்புகள் என்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இணைக்கப்பட்டுள்ள அட்டவணையில் இது தெளிவாகத் தெரிகிறது. மற்ற மாநிலங்கள் முதலீட்டுத் தொகையில் கவனம் செலுத்தும்போது, இந்த திராவிட மாடல் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்துகிறது.


தமிழ்நாடு தொடர்ந்து இந்தியாவின் திறமையின் தலைநகரம் மற்றும் உற்பத்தியின் தலைநகரம்  ஆகத் திகழ்கிறது. தற்போது வந்துள்ள முதலீடுகளால், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையின் எதிர்காலம் முன்பைவிட பிரகாசமாக உள்ளது என்று கூறியுள்ளார்.