முதல் போட்டியிலேயே இந்தியாவுக்கு பதக்கத்தை வென்று.. தமிழக வீரர் செர்வின் அசத்தல்..!
சென்னை: தென் கொரியாவில் இன்று தொடங்கிய ஆசிய தடகளப் போட்டியில், ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தென் கொரியாவில் 26 ஆவது ஆசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று தொடங்கியது. இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி, வரும் மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 43 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். குறிப்பாக இந்த தொடரில் 64 பேர் கொண்ட வீரர் வீராங்கனைகள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இதில் பிரவீன் சித்ரவேல், செர்வின் செபாஸ்டியன், தமிழரசு, ராகுல் குமார், விஷால், சந்தோஷ் குமார், வித்யா ராம்ராஜ் , அபிநயா, சுபா வெங்கடேசன் என தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் அடங்குவர்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின், முதல் போட்டி ஆடவருக்கான 20 மீட்டர் நடைப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன், இந்திய வீரர் அமித், சீனாவைச் சேர்ந்த வாங்க் உள்ளிட்ட 15 வீரர்கள் பங்கேற்றனர். சரியாக உள்ளூர் நேரப்படி காலை 4:30 மணியளவில் தொடங்கிய முதல் போட்டியிலேயே, ஒரு மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கிலோ மீட்டர் இலக்கை கடந்து தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாகும்.
அதேபோல் இந்திய வீரரான அமித் ஐந்தாவது இடத்தை பெற்றார்.
தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் ஏற்கனவே 2022 மற்றும் 23 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார். 2023 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.