ஆன்லைனில் முன்பதிவு மூலம் டாஸ்மாக் மது விற்பனை : அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Su.tha Arivalagan
Aug 05, 2026,04:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் நிலவும் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, ஆன்லைன் மூலம் மதுபானங்களை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.


ஆன்லைன் முன்பதிவு வசதி :


டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் கூடும் நெரிசலைத் தவிர்ப்பதற்காக TASMACE2E.IN என்ற இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் தங்களுக்குத் தேவையான டாஸ்மாக் கடையைத் தேர்வு செய்து, அங்கு இருப்பில் (Stock) உள்ள மதுபான வகைகளைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம். இணைய வழியிலேயே கட்டணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். 


முன்பதிவு செய்த பின்னர், நேரடியாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபான பாட்டில்களைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக இன்றைய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரியவில்சன் குறிப்பிட்டிருந்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


அன்புமணி ராமதாஸ் சாடல் :




டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்."ஆன்லைனில் மது முன்பதிவு செய்யும் திட்டம் மிகவும் ஆபத்தானது. இத்திட்டம் மது வணிகத்தையும், சமூகத்தில் மதுவின் புழக்கத்தையும் மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும். மதுக்கடைகளில் நிலவும் முறைகேடுகளையும் ஊழலையும் ஒழிக்க முடியாமல் அரசு தோற்றுப்போயுள்ளதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது."


மேலும், மது முன்பதிவு நடைமுறைக்கு இணையதளம் தொடங்குவது அதிர்ச்சி அளிப்பதாகவும், ஆன்லைனில் மது விற்பனையை ஊக்குவிப்பது அரசுக்குப் பெருமை சேர்க்காது என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மதுப் பழக்கத்தை அதிகரிக்கும் இந்த ஆபத்தான மற்றும் கேடான முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.