செம டேஸ்ட்... புதிய முறையில் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த புதினா துவையல்!

Su.tha Arivalagan
Feb 20, 2026,03:14 PM IST

- கவிநிலவு சுமதி சிவக்குமார்


புதினா துவையல் மிகவும் ஆரோக்கியமானது, சுவையானது, செரிமானத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதோடு, உணவின் மணத்தை ஒரு படி உயர்த்தும் ஆற்றல் இதற்கு உண்டு. எப்போதும் செய்யும் சட்னி வகைகளைத் தாண்டி, சாதம் மற்றும் டிபன் வகைகளுக்குப் பொருத்தமான ஒரு அட்டகாசமான புதினா துவையல் எப்படிச் செய்வது என்று இங்கே பார்ப்போம்.


தேவையான பொருட்கள்


புதினா – 1 கட்டு (சுத்தம் செய்தது)

பூண்டு – 10 பல்

இஞ்சி – 3 அங்குல துண்டு

பச்சை மிளகாய் – 2

எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை.

உப்பு – தேவையான அளவு




செய்முறை


புதினா இலைகளை ஆய்ந்து, சுத்தமாக அலசி வைக்கவும். பூண்டை உரித்து, இஞ்சியின் தோல் நீக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்சியில் அலசிய புதினா இலைகள், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை சிறு தீயியில் வைத்து வறுக்கவும்.


பருப்புகள் சிவந்ததும், அரைத்து வைத்துள்ள புதினா விழுதைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு போடவும். விழுதிலுள்ள தண்ணீர் வற்றி, எண்ணெய் பிரிந்து சுருண்டு வரும் வரை நன்றாகக் கிளறவும். துவையல் சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, இறுதியில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கிளறவும்.


இந்தச் சுவையான புதினா துவையல் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட அற்புதம்! மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதத்திற்கும் இது ஒரு சிறந்த காம்பினேஷன்.


(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)