சென்னையில் இன்று முதல் டீ,காபி விலை உயர்வு.. அச்சச்சோ.. குடிக்காம இருக்க முடியாதே!
Sep 01, 2025,06:23 PM IST
சென்னை : சென்னையில் இன்று முதல் கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாமாணிய மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று முதல் ஒரு கிளாஸ் டீ ரூ.10 மற்றும் ரூ.12 ல் இருந்து ரூ.15 ஆக உயர்த்தப்படுவதாகவும், காபி விலை 15ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாகவும் டீ கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் விலை, டீ மற்றும் காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பதால் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம்ம ஊரில் டீ காபிக்கு அடிமையானவர்கள்தான் அதிகம். வேலை பார்க்கும்போது இடை இடையே டீ சாப்பிடாமல், காபி சாப்பிடாமல் கூடவே வடை பஜ்ஜி போண்டா என்று ஸ்னாக்ஸ் சாப்பிடாமல் பலருக்கும் இருக்க முடியாது. நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இது மாறி விட்டது.
டீக் கடைகள் இப்போது அதிக அளவில் உள்ளன. இது ஒரு பெரிய பிசினஸாகவும் உள்ளது. குழுமங்களாக இப்போது டீ விற்பனை நிலையங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டீ காபி விலை அதிகரிப்பு பலருக்கும் குறிப்பாக அன்றாட வேலை பார்ப்போருக்கும், அலுவலகம் செல்வோருக்கும் பெரும் இடியாக வந்து சேர்ந்துள்ளது.