ஒரு பொய்யாவது சொல்!

Su.tha Arivalagan
Feb 09, 2026,10:29 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


இருபது இருபத்தைந்து வருடங்களாக தனக்கு இருந்த  உறவுகள் அனைத்தையும் திருமணம்‌ என்ற ஒற்றைச் சொல்லால் தியாகம் செய்து விட்டு வருகிறாள் 


மங்கை மனைவியாகிறாள்....

தங்கை தாரமாகிப் போனாள்....

மகள் மருமகளாகி விடுகிறாள்.....

அக்காள் அண்ணியாக ஆனாள்....


புதிதாக வந்த 

கணவன் என்ற ஒற்றை உறவை 

நம்பி நம்பிக்கையோடு 

அத்தனை காலங்களாக பெற்றெடுத்துப் பேணிப் பாதுகாத்து வளர்த்த 

தன் வீட்டையும் தன் உணர்வுகளையும் மறந்து தன் கணவன் இது அனைத்தையும் ஈடுகட்டுவான் என்று மயங்கி செல்கிறாள்.




போகப்‌ போகப்‌ புரிந்து கொள்வாள் எல்லாம் மாயை என்று....

வெளிக்காட்டிக் கொள்ளாமல் அதையே தன் குடும்பமாக்கிக் கொள்வாள்.


ஆனால் ஆயிரம் இருந்தாலும் அவர்கள் அவள் மாற்றான் வீட்டுப் பிள்ளை என்ற எண்ணத்தை அவர்கள் மாற்றிக்கொள்ள மாட்டார்கள்...


போகட்டும்.....நம் கணவன் நம் பிள்ளைகள் என்று வாழப் பழகி விடுவாள்....


தனக்கு என்ன பிடிக்கும் தான் யார் என்பதை இங்கு யார்க்கும் புரிய வைக்க முடியாது....

புரிந்து கொள்ள அங்கு யாரும் தயாராக இல்லை.


இரத்த பந்தம் இல்லாத ஒரு உறவு‌ தான் கணவன் என்ற உறவு...


இருப்பினும்  அவளுக்கு அவன் தான் உலகம் என்று மாறிவிட்டது....


கணவனை மட்டுமே அவள் கண்கள் தேடும்...


அவனிடம் அவள்‌‌ தேடுவது அங்கீகாரம்....அடுத்தவர் முன் தன்னை விட்டுக் கொடுக்காமல் இருப்பது.


இரண்டும் இல்லாமல் போனாலும்....அவள்

ஏங்குவது....

அது பொய் என்ற போதிலும்  கணவனின் அன்பிற்காக மட்டுமே....

கொடுத்து விட்டுப் போகலாமே ...

பொய்யாகவாவது!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).