தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. செப்டம்பர் 15ல் தொடக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு

Su.tha Arivalagan
Jun 23, 2026,05:17 PM IST

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 


ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கு உதவும் வகையிலும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த அதிரடித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


தகுதிபெறும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 1 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் இலவசமாக வழங்கப்படும்.


மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் மாநிலம் முழுவதும் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது.


திட்டத்திற்கு தகுதி பெறுபவர்கள் யார்?




இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அரசு சில முக்கிய தகுதி நெறிமுறைகளை வகுத்துள்ளது:


தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த தங்கம் வழங்கப்படும்.


குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். இதற்கான முறையான இருப்பிடச் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.


கர்ப்பிணிப் பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்களின் பெயர்களை முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.


திட்டத்தின் நோக்கம்:


தமிழகத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்திற்காகப் பெருமளவில் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக ஆதரவளிக்கும் வகையில், தாய்மாமனின் சீர்வரிசையாக இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.


"இந்தத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், குழந்தை பிறப்பை மகிழ்ச்சியோடு கொண்டாட ஏழை எளிய குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த ஊக்கத்தொகையாக அமையும்" என்று சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இணையதளங்களில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, பொதுமக்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் விரைவில் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.