மக்களின் மனங்களை வென்ற தாய் கிழவி: வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்!
சென்னை: தாய் கிழவி திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
யதார்த்தமான கதைக்களம் மற்றும் உணர்ச்சிகரமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள திரைப்படம் தான் தாய் கிழவி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ராதிகா, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பட்டி தொட்டி எல்லாம் தாய்கிழவி படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியிலும் படம் வெற்றி பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் பாடல்களும், வசனங்களும் வைரலாகி வரும் நிலையில், குடும்பங்கள் கொண்டாடும் படமாக "தாய் கிழவி" மாறியுள்ளது. குறிப்பாக கிராமப்புற பின்னணியில் சொல்லப்பட்ட கதைக்கு நகர்ப்புறங்களிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தை படக்குழுவினர் சென்னையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தில், படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வசனத்தை கூறி தாய் கிழவி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று படக்குழு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.