Tamil Poems: தனி மனிதி!

Su.tha Arivalagan
Jun 15, 2026,03:15 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


வந்ததும், போனதும்,

வருவதும், இருப்பதும்,

தொடர் வினை என்றே

தொல்லைகள் தவிர்த்து,


நிந்தனை செய்யாது

நிகழ்வினை வாழ்ந்தும்,

சொந்தமும் பந்தமும்

பெருந்துக்கம் ஆகி,


ஆதி முதல் அந்தம் வரை

அவன் ஆக்கினையின் நாடகம் 

நடித்தே ஓய்ந்தேன்.




எத்துணையும் இன்றி, 

அத்துணை நடப்பது,

இயலாதென்றே 

நித்திரை  செய்ய முடிவும் செய்ய,


அரங்கத்தாடுவான் ஆணையில்,

சித்தனார் செய்திறனில்

அசையா மனம்

கொண்டு ஏகினேன் அவன் காட்டிய தனியிடம்.


ஒன்று மட்டும் சொல்லிப்  போவேன்:

இருளுக்குள் ஒளியுண்டு

மருளுக்குள் அறிவுண்டு

அருளுக்குள் ஆங்காரமும் உண்டு.


புரிந்தவருக்கு பொருள் புரியும்.

புரியாதவருக்கு புதிராகவே இருக்கட்டுமது.

அதுவே எனக்கு சம்மதம்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)