65 ஆண்டுகளாக 10 ரூபாய் பெற்றுக்கொண்டு சிகிச்சை பார்த்த ரத்தினம்பிள்ளை காலமானார்!

Meenakshi
Jun 07, 2025,03:34 PM IST

தஞ்சை:  தஞ்சையை சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட 10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை இன்று காலமானார். அவருக்கு வயது 96. இவர் சுமார் 65,000க்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களைப் பார்த்துள்ளார். இவர் டாக்டர் டி.கே.சுவாமிநாதனின் தந்தையாவார்.  மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்பட்டவர்.


டாக்டர் ரத்தினம் பிள்ளை கடந்த 50 ஆண்டுகளாக, எந்தகைய கொடிய நோய்க்கும் மக்களிடம் குறைந்தளவு பணத்தை பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். கைராசிக்கார டாக்டர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர்.  எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமலேயே  சுகப்பிரசவம் செய்தவர். இப்பகுதி மக்களால்  போற்றப்பட்டு வந்தவர் டாக்டர் ரத்தினம்பிள்ளை.




இவரின் இந்த மருத்துவ சேவையை பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதினை வழங்கி கெளரவித்து வந்துள்ளது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று காலமானார். அன்னாரின் மறைவிற்கு பலதரப்பட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றன. இவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.