மருத்துவர்கள் தினம்.. இரவு பகலாக மக்களின் நலனுக்காக போராடும் Warriors.. வாழ்த்துவோம்!
- ஸ்வர்ணலட்சுமி
இரவு பகல் பாராது மக்களுக்காக அவர்களின் நலனுக்காக சேவை புரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்.
உடல் நோயோ மனநோயோ உதிரம் கொட்டி உணர்வுகள் மருந்து உயிர் பிரியும் நிலையிலும் உயிர் கொண்டு பேணி உயிரை உடலிடம் மீண்டும் கொடுக்கும் மருத்துவர்களுக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்.
மகத்தான மருத்துவர்களே! மற்றவர்களின் உயிரை காப்பாற்றவும் ,அவர்கள் நோயிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக இருக்கவும் ,கடினமாக உழைக்கும் நீங்கள் தான் சமுதாயத்தின் உண்மையான "ராஜாக்கள்".
கொரோனா காலத்தில் உலகம் முழுதும் மருத்துவர்கள் செய்த சேவையை நாம் யாரும் எளிதில் மறக்க இயலாது... என்றென்றும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்... மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி கூறும் நன்னாள் இந்த ஜூலை ஒன்றாம் நாள்.
மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையிலும் ,அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தின கருப்பொருள் என்ன தெரியுமா.. முகமூடிக்கு பின்னால் குணப்படுத்துபவர்களை யார் குணப்படுத்துகிறார்கள்?" மருத்துவர்களின் பங்களிப்பை ஒப்புக் கொள்வதுடன் அவர்களுடைய மன ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கருப்பொருள் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.
இந்த நாள் சிறந்த மருத்துவர் ,கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் மேற்கு வங்கத்தில் இரண்டாவது முதல்வரான டாக்டர் .பிதன் சந்திர ராயின் புகழ்பெற்ற மரபுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவரது பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. இது மருத்துவத்திற்கும் தேசத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட அவருடைய வாழ்க்கையின் முழுமையான வட்டத்தை பிரதிபலிக்கிறது.
டாக்டர் பிதன் சந்திர ராய் IMA - (Indian Medical Association)இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் (MCI)ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். இந்த நிறுவனங்கள் இன்னும் இந்தியாவில் மருத்துவ தரங்களை ஒழுங்குபடுத்தி மேம்படுத்துகின்றன.
தேசத்திற்கு டாக்டர் .பிதன் சந்திரராய் ஆற்றிய விதிவிலக்கான சேவையை பாராட்டி 1961 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான "பாரத ரத்னா" விருதை பெற்ற பெருமைக்குரியவர்.
டாக்டர் பிதன் சந்திரராய் அவர்களின் மேற்கோள்:"ஒரு பணி ,அது பொதுவாக முக்கியமானதாக கருதப்பட்டாலும் சரி, வேறு விதமாக கருதப்பட்டாலும் சரி ,நான் செய்ய வேண்டிய பணிக்கு வரும்போது என்னை பொறுத்தவரை அது உடனடியாக முக்கியத்துவம் பெறுகிறது அது முடியும் வரை என்னால் ஓய்வெடுக்க முடியாது" இவ்வாறு பல மேற்கோள்கள் கூறிய அனைவருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்தவர் அவர்.
நோயாளிகளை குணப்படுத்தும் கரங்களுக்கும், மருத்துவர்கள் உடைய அயராத உழைப்பிற்கும், உலகை ஆரோக்கியமான இடமாக மாற்றுவதில் அவர்களுடைய அர்ப்பணிப்பிற்கும், அயராத முயற்சிக்கும் தலைவணங்கி நாம் அனைவரும் தலைவணங்கி நன்றி கூறும் நாள் இந்த நாள். அனைத்து மருத்துவர்களுக்கும் "மருத்துவர் தின வாழ்த்துக்கள்"
மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.