இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
சென்னை: இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு தந்தை பெரியார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும், யாரும் சிறியார் இல்லை என்று சொன்னவர் பெரியார். அதனால்தான் அவர் பெரியார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் புகழாரம் சூட்டியுள்ளனர்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளும், தமிழக வெற்றிக் கழகமும் பெரியார் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுகின்றன.
பெரியார் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்! என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார்! உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார்! சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்!
யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார்! அதனாலே அவர் நம் #பெரியார் என்றானார்!
பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அதிமுக தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம்! வாழ்க பெரியாரின் புகழ் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.00 மணி அளவில், அனைத்துக் கழக மாவட்டங்களிலும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும் என வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.