ஏற்காட்டில்.. 48வது மலர் கண்காட்சி இன்று முதல் தொடக்கம்..!

Manjula Devi
May 23, 2025,11:03 AM IST

சேலம்: ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.


சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண ஆண்டு தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு 48வது மலர்க்கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று மாலை 4 (23ஆம் தேதி) தொடங்குகிறது. இதனை அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ராஜன் கண்ணப்பா, ராஜேந்திரன், ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளார். 


இன்று தொடங்கும் இந்த மலர்க் கண்காட்சி வரும் 29ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், தோட்டக்கலை சார்பில் 1.50 லட்சம் வண்ண வண்ண மலர்களைக் கொண்டு வனவிலங்குகள், அணைகள் போன்ற பல்வேறு வடிவகங்களில் மலர்ச்சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 25000க்கும் மேற்பட்ட வண்ண வண்ண பூந்தொட்டிகளும் உள்ளது. இது தவிர வேளாண் துறை சார்பில் காய்கறி கண்காட்சிகள், பழ கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 




இதன் காரணமாக இன்று காலை 7 மணி முதலே ஏற்காடு மலைப்பாதையில் ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளும் மலையேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாட்டுப்புற நடனங்களான புலியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மற்றும் மேற்கிந்திய நடன நிகழ்ச்சிகள் போன்றவை ரெட்டிரீட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. 


நாளை சிறுவர்களுக்கான இளம் தளிர் வாக்கிங் போட்டி,நடைவண்டி, உப்பு மூட்டை தூக்குதல், அடுப்பில்லா சமையல் போட்டி ஏராளமான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் 25ஆம் தேதி நாய்கள் கண்காட்சி, மிமிக்கிரி, செமி கிளாசிக்கல் டான்ஸ், கோலாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், 26 ஆம் தேதி பொது மக்களுக்கான குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளும், 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியும், கலையரங்கத்தில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பின்னர் 28ஆம் தேதி பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக் போன்ற கலை நிகழ்ச்சிகளும், 29ஆம் தேதி கரகாட்டம், தப்பாட்டம், நையாண்டி மேளம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


இந்த நிலையில் ஏற்காட்டில் இன்று மாலை தொடங்கும் 48 வது மலர்க்காட்சி முன்னிட்டு மலை பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பொது மக்களின் வசதிக்காக ஏற்காட்டுக்கு செல்ல 12 பேருந்துகளுடன் கூடுதலாக 32 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஏற்காடு செல்லும் வாகனங்கள் கோரிமேடு அடிவாரம் வழியாக செல்ல வேண்டும். அதேபோல் ஏற்காட்டில் இருந்து கீழே வரும் வாகனங்கள் கொட்டச்சேடு-

குப்பனூர் வழியாக செல்ல வேண்டும் எனவும் தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.