பள்ளிக்கூடம் போகலாமா.. பள்ளிகள் திறப்பை முன்னிட்டு.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை!
சென்னை: கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடியே வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தி உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2025 டூ 26 ஆம் கல்வியாண்டில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் திறப்பதை மீண்டும் மீண்டும் பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தி உள்ளது. ஏனெனில் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது காற்று சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி உள்ளதாலும் தமிழகத்தில் வெயில் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டபடியே, தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் இரண்டாம் தேதி திறக்கப்படும் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.மேலும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளியில் உள்ள வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அலுவலகம், ஆய்வகங்கள், கழிவறைகள், என அனைத்தும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். மின் சாதனங்களை பரிசோதனை செய்ய வேண்டும். கரும்பலகை கள் மை பூசி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமானதாகவும், தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மதிய இடைவேளை முடிந்து 20 நிமிடங்கள் சிறார் இதழை படிக்க வைக்க வேண்டும்.
வாரம் ஒருமுறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும். இதன் மூலம் மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்.
வாரம் தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த
பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.