தோழா தோழா தோள் கொடு கொஞ்சம்.. நட்பிற்கு ஏழு தலைமுறை பெயர்கள் வைப்போமா?

Su.tha Arivalagan
Mar 31, 2026,10:13 AM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


நட்பிற்கு ஏழு தலைமுறை பெயர்கள் வைப்போமா?


தலைப்பை கேட்டதும் தலை சுற்றுகிறதா? வாங்க மாற்றி யோசிப்போம். மாற்றத்தை ஏற்படுத்துவோம். 


ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்.


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு போன்ற  நட்பை பற்றிய பழமொழிகள் & திருக்குறள் பார்த்திருப்போம். நட்பாக எப்படி பழக வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.


வாழ்வின்  தொடக்கம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகை நட்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் நட்புகளில் மிகவும் சிறந்ததாக கருதப்படுவது பள்ளிப் பருவ நட்பாகும்.




நட்பு என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு கிடைக்கும் புனிதமான உறவாகும். உறவுகளை சொல்லி அழைக்க ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உரிமையாக பெயரை  சொல்லி அழைக்கும் நட்பிற்கு ஈடு இணை இந்த உலகில் கிடையாது.


எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலும், தன்னலம் கருதாது தனது நட்பிற்காக செய்யும் ஒவ்வொரு செயலும் பாராட்டுதலுக்குரியதாகும். ஆண் -பெண் பாகுபாடு இல்லாமலும், வயது வித்தியாசம் பார்க்காமல் பழகும் உண்மையான நட்பு சிறப்பாக அமையும்.


சிறு குழந்தைகள் முதல் ஆண்- பெண் பாகுபாடு இல்லாமல் நட்பாக பழக கற்றுக் கொடுக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகளை தனித்தனியாக பள்ளி, கல்லூரிகளில் சேர்ப்பதை விட co-education பள்ளியில் சேர்த்து ஆண்- பெண் பாகுபாடு இல்லாமல் பழகுவதே சிறப்பான கல்வியாக இருக்கும்.


நம் வீடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் நமது நட்பிற்கு மரியாதை கொடுக்கும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும். நட்பில் ஜாதி, மதம், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் பழக வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது நண்பனை விட்டுக் கொடுக்காமல் இருக்க வேண்டும். உறவுகள் தலைமுறை தலைமுறையாக வருவதை போல் நட்புக்களும் தலைமுறை தலைமுறையாக வரவைப்போம் .


நாம் மட்டும்  நட்பாக பழகாமல் நமது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் நட்பாக பழகி நமது குழந்தைகளையும், நண்பர்களின் குழந்தைகளையும் நட்பாக பழக வைக்க வேண்டும். இனிவரும் காலங்களில்   நட்பிற்கும் உறவு பெயர்கள் வைத்து வரவேற்போம் .


ஏழு தலைமுறை பெயர்கள் அம்மா- அப்பா, தாத்தா- பாட்டி ,கொள்ளு தாத்தா -கொள்ளு பாட்டி என்று பெயர் வைப்பது போல் நட்பிற்கும் ஏழு தலைமுறை பெயரை வைப்போம்.


மேலே சொன்னது அனைத்தும் உண்மை என்று தோன்றுகிறதா? நாமும் மாற்றி யோசித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் .


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)