தமிழ்நாட்டில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு ..இந்திய வானிலை ஆய்வு மையம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கி பரவலாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. இதனால் மக்கள் வெப்ப அலையை தாங்க முடியாமல் தவிர்ப்பிற்குள்ளாகினர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கி காலை முதல் மாலை வரை வெயில் உச்சமாக இருந்தது. பின்பு வானில் இடி மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்தன. இதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. செங்கல்பட்டு, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் கனமழை நீடித்தது. இதனால் தமிழகத்தில் தற்போது வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. மேலும் கடலூரில் 4 சென்டிமீட்டர், ஏற்காடு மற்றும் சிதம்பரத்தில் தலா 3.5 சென்டிமீட்டர், மணல்மேட்டில் 3 சென்டிமீட்டர், பெரம்பலூரில் 2.8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
காலை 10 மணிக்குள் மழை பெய்யும் மாவட்டங்கள்:
நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, குமரி, ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.