ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: வேலூரில் நடைபெறும் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் இன்று கிளம்பிச் சென்றார்.
வேலூரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக அவர் ரயில் மூலம் காட்பாடி சென்று அங்கிருந்து வேலூர் செல்கிறார். காலை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த முதல்வருக்கு திமுகவினர் திரளாக கூடி பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் திரண்டு வந்து முதல்வரை வழியனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!
இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
மாண்புமிகு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது… ஏசி பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.
ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.