உயிரின் சிரிப்பு
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.
வணக்கம் . ஒரு நிமிஷங்க..
நான் உயிர் பேசுகிறேன்..
ஆம்.... நான் உயிரே தான் .!!!
இன்று எல்லா நாளிதழ்களிலும்....
இந்த என் உடலின் புகைப்படம் , முதல் பக்கத்தில்.
வானொலியில், தொலைக்காட்சியில்,
வரிந்து கட்டி என் செய்தியை வாசித்தனர்.
எனது செய்தியே தலைப்புச் செய்தியானது.
எல்லோரும் என்னைப்பற்றியே பேசுகிறார்கள்.
காரணம் நேற்று நான் திட்டமிட்டு,
படுகொலை செய்யப்பட்டுள்ளேன்.
மத்திய அமைச்சர் முதல் ,பிரதம மந்திரி வரை...
எனக்காக இரங்கல் செய்தி... அனுப்பியுள்ளனர் .
நேற்று வரை.....சாதாரண போராளி நான்.
இன்று... இந்தியா முழுவதும் தெரிகிறேன் .
நியாயத்திற்காக போராடி ...போராடி ...
நிறைய சுயநலவாதிகளுக்கு பகையாளியானேன்.
தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல்கள்.
தொடர்ந்து என் உயிருக்கு பாதுகாப்பு கேட்டேன்.
நியாயத்திற்காக போராடிய நான் ,என் உயிருக்கு ,
நிறைய பாதுகாப்பு கேட்டும்... போராடினேன்.
நியாயமும் கிடைக்கவில்லை. என்,
நல்ல உயிருக்கு பாதுகாப்பும் கிடைக்கவில்லை.
இன்று....!!! என் உயிர் போனபின்...
இந்த நாடு முழுவதும், எனக்காக.,..!!!
சாலை மறியல்கள்.. ஊர்வலங்கள்.
சாதியக் கொலையை கண்டித்து போராட்டங்கள்.
பத்திரிகைகள்...என் பக்க நியாயத்தை...
பல பக்கங்களில் வரிந்துகட்டி எழுதியுள்ளன.
என்கோரிக்கைகள் நிறைவேறும் இனி !!!
என் உயிர் போன நிலையில் ...!!!
நியாயம் கேட்டதற்கு விலை...??
என் உயிர் ...
உயிரற்ற உடலால்.... உடலற்ற உயிரால்....
இனி என்ன செய்ய முடியும் .....!!!
சிரிக்கிறேன்!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).