கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
டோரன்டோ: கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கூட்டணி ஆட்சியமைக்க பிரதமர் மார்க் கார்னி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் 172 ஆகும். ஆனால் ஆளும் லிபரல் கட்சிக்கு155 இடங்களே கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 149 இடங்களில் முன்னிலையில் உள்ளது. Yves-François Blanchet தலைமையிலான Bloc Québécois கட்சி 26 இடங்களிலும், ஜக்மீத் சிங் தலைமையிலான என்டிபி கட்சி 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக தடைகள் மற்றும் கனடாவை அமெரிக்காவோடு இணைக்கும் அச்சுறுத்தலை சமாளிக்க தனக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று பிரதமர் மார்க் கார்னி தேர்தலுக்கு முன்பு மக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், லிபரல் கட்சிக்கு பெரும்பான்மைக்கு தேவையான 172 இடங்கள் கிடைக்கவில்லை.
ஜனவரி 6-ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார். ட்ரூடோவுக்கு பதிலாக கார்னி பிரதமரானதும், ட்ரம்ப் மீது இருந்த அதிருப்தியால் தேர்தல் முடிவுகள் மாறின. தேர்தலுக்கு முன்பு, CBC செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பின்படி, லிபரல் கட்சிக்கு 42.8 சதவீத ஆதரவும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 39.2 சதவீத ஆதரவும் இருந்தது. NDP மற்றும் Bloc Quebecois ஆகிய சிறிய கட்சிகளின் செயல்பாடு லிபரல் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கனடாவில் சுமார் 29 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். இதில், 7.3 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்தனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 343 எம்.பி பதவியிடங்கள் உள்ளன. பெரும்பான்மை பெற 172 இடங்கள் தேவை. லிபரல் கட்சி 2015-ல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் 2019 முதல் சிறுபான்மை அரசாங்கமாக ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.