காத்திருந்த தொட்டில்
- J லீலாவதி
10 மாதம் சுமந்தவளுக்கு சலித்து விட்டதோ!
பிறந்த அந்த நிமிடம் மடியில் சுமக்கவில்லை
என் முகம் பார்க்கவில்லை
என் குரலை கேட்கவில்லை
என் உச்சி முகரவில்லை
முத்தமும் இடவில்லை
என் கையை நீட்ட
அந்த விரலை பிடிக்க தந்தையும் இல்லை
எனக்காக காத்திருக்க வாசற்படியில் யாரும் இல்லை
காத்திருந்தது எனக்கான ஒரு தொட்டில்
அதில் என்னை போட்டுவிட்டு
பெயரும் வைத்துவிட்டு சென்றனர்
நீ அனாதை என்று
அதில் எதுவும் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறேன்
அழகாக (அனாதையாக)
தெருவோரம் வீசப்பட்ட சருகல்ல நான்,
தேடிக் கிடைத்த கருவூலம் என்று எண்ணிக் கொண்டேன்!
உறவுகளின் முகவரி தெரியவில்லை - ஆனால்
உணர்வற்றுப் போகவில்லை என் பிஞ்சு இதயம்.
பாலூட்ட ஒரு மார்பு இல்லை,
தாலாட்ட ஒரு சொந்தம் இல்லை!
ஆனாலும்...
ஆயிரம் கைகள் என்னை அள்ளி அணைக்கலாம்,
ஆயிரம் உறவுகள் எனக்குப் பெயர் சூட்டலாம்.
அனாதை என்பது என் பெயரல்ல,
அது இந்த உலகம் எனக்குச் சூட்டிய தழும்பு!
தொட்டில் ஆடிக்கொண்டிருக்கிறது...
யார் வருவார் என அல்ல,
நானே எனக்கான உலகத்தைப் படைப்பேன் என்று!
கண்ணீர் துடைக்க கரங்கள் இல்லை - அதனால்
என் கண்ணீரே எனக்குப் பழகிப் போனது!
விதி செய்த சதியில் நான் வீழ்ந்து விடமாட்டேன்,
அனாதையாய் பிறந்தேன் - ஆனால்
ஆளுமையாய் வளர்வேன்!
(J.லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)