யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு

Su.tha Arivalagan
Apr 19, 2025,10:46 AM IST

டெல்லி: ரூ. 2000க்கு மேல் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது மக்களை திசை திருப்ப முயலும் அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


நாட்டில் இப்போது எதற்கெடுத்தாலும் யுபிஐ என்று ஆகி விட்டது. கையில் காசு இல்லாமலேயே ஜிபே, போன்பே, பேடிஎம் மூலம் மக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை செலுத்தப் பழகி விட்டனர். டீ சாப்பி்டடால் கூட ஜிபே செய்யும் ஆட்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு காய்கறி வாங்குவது, மளிகைப் பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றுக்குமே யுபிஐ பரிவர்த்தனைகள்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன.




இந்த நிலையில் திடீரென ஒரு செய்தி வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது ரூ. 2000க்கு மேல் யுபிஐ மூலம் பணம் அனுப்பினால் அதற்கு ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியானது. இது மக்களை அதிர வைத்தது. யுபிஐ மூலம்தான் பெரும்பாலோனார் பணப் பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கும் ஜிஎஸ்டி என்று  வந்தால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்குமே என்பதுதான் மக்களின் அதிர்ச்சிக்குக் காரணம்.


ஆனால் இந்த செய்தியை மத்திய நிதியமைச்சகம் தற்போது மறுத்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ரூ. 2000க்கு மேல் பணப் பரிவர்த்தனையை யுபிஐ மூலம் செய்தால் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக வெளியான செய்தி தவறானது, உண்மைக்குப் புறம்பானது, அடிப்படை ஆதாரமற்றது. மக்களை திசை திருப்பும் வகையிலான இந்த செய்தியை நம்ப வேண்டாம். அப்படி ஒரு திட்டம் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.