திண்டல் மலையின் நாயகன்.. வினை தீர்க்கும் குழந்தை வேலாயுத சுவாமி கோவில்

Swarnalakshmi
Jun 17, 2025,12:03 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஜூன் மாதம் 17ஆம் தேதி ஆனி மாதம் மூன்றாம் நாள் தேய்பிறை சஷ்டியான இன்று வினைகள் தீர்க்கும் குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில் சிறப்புகள் பற்றி காண்போம்...


தமிழ்நாட்டில் ஈரோடு அருகே அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோவில்  தேனுலவும் நாககிரி திண்டல் மலையில் அமைந்துள்ளது. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்கின்ற வழியில் 8 கிலோமீட்டர் தொலைவில் திண்டல்மலை மீது 200 அடி உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் திருத்தலம் இது. ஸ்வஸ்திக் வடிவத்தில் உள்ள ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம்.


அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயில் ஒன்றாகும் . இந்த இடம் ஒரு தனித்துவமான இடமாகும் .கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது .இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான் குழந்தை வேலாயுத சுவாமி ,குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.


கோவில் தீப ஸ்தம்பம்:


கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தை கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். இதுபோன்ற தீபஸ்தம்பம் இந்த திண்டல் மலையில் அமைக்கப்பட்டுள்ளது இக்கோவிலில் சிறப்பு ஆகும்.  தீபஸ்தம்பத்தில் நான்கு புறமும் சமய தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழா இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவிளக்கு ஏற்றி பக்தர்கள் ஜோதி வழிபாடு செய்கின்றனர்.


பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோவிலாக கட்டப்பட்டு பின்னர் நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகிறது. ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வளங்கள் நிறைந்து ,செல்வ வளம் நிறைந்து விளங்குகிறது. திண்டல்மலை கோவில் இங்கு அமைந்துள்ளது அதற்கு  மேலும் சிறப்பை சேர்க்கிறது.


திருவிழாக்கள்:




மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி ,அமாவாசை ஆகிய நாட்களில்  உற்சவம் நடக்கிறது .ஆண்டு முழுவதும் முறைப்படி பல உற்சவங்கள் நடைபெறுகின்றன .தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசி   விசாகம் ,தலை ஆடி ,ஆடி 18 ,  ஆவணி அவிட்டம் ,ஆடி வெள்ளிக்கிழமைகள், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி ,சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்காரம் ,கல்யாண உற்சவம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல் ,தைப்பூசம், சிவராத்திரி ,பங்குனி உத்திரம் ஆகிய விழா நாட்களில் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெறுகின்றன.


தல சிறப்பு:


அரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமைந்திருப்பது ,அடுத்து இரண்டு நாகர் சிற்பங்களுடன் சித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் .இங்கு அமைந்துள்ள இடுபனாருக்கு தனிச்சிறப்பு உள்ளது. நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பனை வேண்டி மழை பொழிந்ததாகவும், வேண்டுதலுக்கு பிறகு மழை பெய்து வளம் ஏற்பட்டது என்றும் வரலாறு கூறுகின்றது .எனவே, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின்  அருளைப் பெறுவது  இன்றும் நடைமுறையில் உள்ளது.


வழிபாடுகள்:


செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் பாதங்களில் வைத்து வேண்டுதல் வைத்தால்  எண்ணங்கள், வேண்டுதல்கள் நிறைவேறும், புதிய வாகனங்கள் வாங்குபவர்கள் இங்கு வந்து சிறப்பு பூஜை செய்கின்றனர் தங்கரதம் தேரை கொண்ட சிறப்பான  புனித ஸ்தலம் இக்கோவில்.


குன்று தோறும் குடி கொண்டிருக்கும் முருகன் அருளும் ,இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி அருளும் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமையும், சஷ்டியும் சேர்ந்த நாளான இன்று கிடைக்கட்டும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.