திருச்செந்தூரில் கடலோரத்தில்.....!

Su.tha Arivalagan
Jan 31, 2026,05:05 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


அறுபடை வீடுகளில் கடலோடு கவசன் அருள் பாலிக்கும் புண்ணியத்தலம் தான் திருச்செந்தூர்.


எனக்கு மிகவும் பிடித்த இடம் திருச்செந்தூர் மட்டுமே! சிறுவயது முதலே செந்தூர் வேலவனுக்கும் எனக்கும் ஒரு நல்ல பந்தம் ஏற்பட்டு விட்டது.


என் அப்பா அண்ணன், தம்பிகள் மற்றும் உறவினர்கள் திருச்செந்தூர் முருகனுக்கு மாலை போட்டு ஒரு மாதம் விரதம் இருந்து மாசி மகத்திற்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஒரு திருவிழா போல தான் எங்களுக்கு அன்றைய நாள்கள்....




நாள்தோறும் மாலை ஐந்து மணிக்கு டேப்ரிக்கார்டரில் முருகன் பக்திப் பாடல்கள் போட்டு விட்டு ஆரம்பிப்போம். எனக்கெல்லாம் அத்தனை பாட்டும் அத்துப்படி...


திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.... தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்

...... மண்ணாணாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்... 

உனைப் பாடும் பொழுதன்றி வேறு இல்லை....

அழகென்ற சொல்லுக்கு முருகா.......

முருகனைக் கும்பிட்டு முறையிட்ட பேருக்கு..... 


பிறகு கந்தசஷ்டி கவசம் படித்து சாமி‌ கும்பிட்டு விரதம் விடுவோம்.....விரதம் னா சும்மா இல்லை. தினமும் சாம்பார் ரசம் வெஞ்சனம் அப்பளம்....அதுவும் வாழை இலையில்.,....


ஆண்கள் பாதயாத்திரை செல்வார்கள். பெண்கள் இரண்டு நாள்கள் கழித்து வாகனத்தில் புறப்பட்டு செல்வோம்......


மாலை நேரம் சில்லென்ற குளிர்ந்த காற்று.... திருச்செந்தூரில் முருகா முருகா என்று வெட வெட வென.... நடுங்கிக் கொண்டே கீழே இறங்குவோம்.... இறங்கியவுடன் மண்டபம் சென்று பாதயாத்திரையாக வந்த சாமிகளை சந்தித்து விட்டு.... அடுத்த நொடி கடற்கரைக்கு ஓடி விடுவோம். கடலலையில் கால் நனைத்து குதித்து ஒரே ஆட்டம் தான்... இடையில் திருச்செந்தூர் ஸ்பெஷல் தேங்காய் மாங்காய் சுண்டல் வேறு.....மணலில் உட்கார்ந்து கடலை ரசியோ ரசி என்று ரசித்து விட்டு... அம்மாக்கள் அதட்டியவுடன்....


மண்டபம் சென்று புளிச்சோறைப் புசிக்க ஆரம்பித்து விடுவோம்.... நான்கைந்து குடும்பங்கள் கூடி வகை வகையாய் புளிச்சோறையும் எலுமிச்சை சோற்றையும் கத்தரிக்காய் புளிக்கூட்டையும்... பத்தாதக்கு பக்காவடையையும்..... சாப்பிட்டு விட்டு...... படுத்துக் கொண்டே அங்கே நடக்கும் இசைக் கச்சேரிகளை ரசித்துக் கொண்டே தூங்கி விடுவோம்....


விடியற்காலையில் எழுந்து கடலுக்கு சென்று  குளித்து விட்டு நாழிக்கிணற்றுக்கு சென்று நீராடிவிட்டு வரிசையில் நிற்போம்.... என் அப்பன் முருகனை... செந்தில் குமரனை இன்னும் சிறிது நேரத்தில் தரிசித்து விடுவோம்.....


கருவறை அருகில் வரும்போதே....என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு என்று உரக்கக் கூற .... நாங்கள் கோரஸாக அரோகரா என்று சொல்வோம்....பழனி ஆண்டவனுக்கு.... திருப்பரங்குன்றம் முருகனுக்கு... கந்தனுக்கு... வேலனுக்கு...என்று அரோகரா சத்தம் விண்ணை முட்டும்... கண்களில் ஆனந்தக் கண்ணீர் முட்டும்.....

முருகனை ஆசைதீர பார்த்து தரிசனம் முடித்துவிட்டு.....


வள்ளி குகைக்கும் சென்று தரிசனம் செய்வோம்......


பிரகார சுவற்றில் ஒரு துளையில் காதை வைத்துக் கேட்டால்...ஓம் சரவணபவாய‌நம என்ற கடலலையின் ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும்.... திருச்செந்தூர கடல் என் அப்பனை மூச்சு விடாமல் தரிசிப்பதை உலகுக்கு உணர்த்தும் சத்தம் தான் அது........!


இப்போது எங்கே? கடைத்தெருவுக்கு தான்.... எல்லாக் கடைக்குள்ளும் போய் வந்து ஒரு வழியா...அப்பா கொடுத்த பணம் அம்புட்டையும் பொருள்களாக மாற்றி விட்டு....அடுத்து சில்லுக்கருப்பட்டி... பஞ்சாமிர்தம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம்....  அடுத்த வருடம் எப்போ வரும்.... அப்பா எப்போ மாலை போடுவார்....என்று ஆசையோடு காத்துக் கிடப்போம்....


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).