யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூற வேண்டும்: திருமாவளவன்
மதுரை: செங்கோட்டையன் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. யார்? யாரை கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் வெளிப்படையாக கூறவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் போசும் போது, அதிமுக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்றால் அதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். கட்சி ஒன்றுபட்டால் மட்டுமே அதிமுக.,வால் மீண்டும் வெற்றி பெற முடியும். மறப்போம், மன்னிப்போம் என அதிமுக தலைவர்கள் வழியில் செயல்பட்டு, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை அரவணைத்து, ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.
இன்னும் 10 நாட்களில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஒருமித்த கருத்து கொண்டவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளில் இறங்குவோம். பிரிந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளாத வரை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார சுற்றுப் பயணங்களில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றார். இது இன்று அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் இந்த கருத்திற்கு பெரும் பான்மையான அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளன் பேசுகையில், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என கட்சிக்குள் இருக்கும் செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர். செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேசப்போவதாக சொன்னார்; ஆனால் அவர் இன்னும் முழுமையாக மனம் திறக்கவில்லை. யார்? யாரை எல்லாம் கட்சியில் இணைக்க வேண்டும் என்பதை செங்கோட்டையன் வெளிப்படையாக கூறலாம். அதிமுக ஒரு திராவிட இயக்கம். பெரியார் இயக்கம் என்கிற முறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.