வக்ஃபு திருத்தச் சட்டம்:உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம்:திருமாவளவன்
சென்னை: வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் சில பிரிவுகளுக்கு விதித்துள்ள தடையை வரவேற்கிறோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் தொடுத்திருந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்காமல் முஸ்லிம்களுக்கு எதிரான சில பிரிவுகளுக்கு மட்டும் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனினும், தற்காலிக ஆறுதல் என்ற வகையில் இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
வக்ஃபு திருத்தச் சட்டத்தில் பின்வரும் பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
1. பிரிவு 3 (r) : வக்ஃபு அளிப்பதற்கு ஒருவர் 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும் என்ற பிரிவுக்குத் தடை :
இஸ்லாமிய நடைமுறைகளை ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றுகிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கு இப்போது எந்த விதியும் இல்லாத நிலையில் , மாநில அரசுகளால் உருவாக்கப்படும் விதிகள் மூலம் அது தீர்மானிக்கப்படுவதற்கான பொறிமுறை வகுக்கப்படும் வரை அந்தப் பிரிவு நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தகைய பொறிமுறை இல்லாத பட்சத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படலாம்.
2. பிரிவு 3 C (2)-இல் உள்ள நிபந்தனைக்குத் தடை : நியமிக்கப்பட்ட அலுவலர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஒரு சொத்து சொத்து வக்ஃப் சொத்தாகக் கருதப்படாது என இந்தப் பிரிவு சொல்கிறது. (3) நியமிக்கப்பட்ட அலுவலர் அந்த சொத்து அரசு சொத்து எனத் தீர்மானித்தால், அவர் வருவாய்ப் பதிவுகளில் தேவையான திருத்தங்களைச் செய்து, இது தொடர்பாக மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பார் எனவும் அந்தப் பிரிவில் கூறப்பட்டுள்ளது. (4) நியமிக்கப்பட்ட அலுவலரின் அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, வருவாய் ஆவணங்களில் தகுந்த திருத்தங்களைச் செய்யுமாறு வாரியத்திற்கு உத்தரவிடும்" என இந்தப் பிரிவு கூறுகிறது- இந்த சட்டப் பிரிவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வக்ஃபு சொத்தின் உரிமைகளைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் தருவது அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள, அதிகாரப் பிரிவினைக்கு எதிரானது; நிர்வாகத் துறை சார்ந்த ( executive ) அதிகாரி குடிமக்களின் உரிமைகளைத் தீர்மானிக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நியமிக்கப்பட்ட அலுவலரின் முடிவுகள் இறுதியாகும் வரை, சொத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
3. பிரிவு 3 C -இன் கீழ் வக்ஃபு சொத்தின் உரிமை தொடர்பான விவகாரம் : பிரிவு 83-ன் கீழ் தீர்ப்பாயத்தால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உயர் நீதிமன்றத்தின் மேலதிக உத்தரவுகளுக்கு உட்பட்டு, வக்ஃப் சொத்து பறிக்கப்படாது, வருவாய் பதிவுகள் மற்றும் வாரியத்தின் பதிவுகள் பாதிக்கப்படாது. இருப்பினும், பிரிவு 3 C -யின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டு, பிரிவு 83-ன் கீழ் இறுதி தீர்மானம் வரும் வரை, மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் உத்தரவுகளுக்கு உட்பட்டு, அத்தகைய சொத்துகளில் மூன்றாம் தரப்பு உரிமைகள் உருவாக்கப்படக் கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
4. பிரிவு 9-ன் கீழ் மத்திய வக்ஃப் கவுன்சிலில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு :
20 உறுப்பினர்களில் நான்கு பேர்களுக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பிரிவு 14-ன் கீழ் மாநில வாரியங்களுக்கு, 11 உறுப்பினர்களில் மூன்று பேருக்கு மேல் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
5. வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முஸ்லிம் அல்லாதவரையும் நியமிப்பதற்கு வகை செய்யும் பிரிவு 23-ஐ உச்சநீதிமன்றம் நிறுத்தி வைக்கவில்லை. ஆனால் தலைமை நிர்வாக அதிகாரியாக , இயன்றவரை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரையே நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வக்ஃபு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக முஸ்லிம் அல்லாதவரையும் நியமிப்பதற்கு வகை செய்யும் பிரிவு 23-ஐ உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பதையும்; வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிப்பதற்கு அனுமதி அளித்திருப்பதையும் நம்மால் ஏற்க முடியவில்லை. வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டும் என்றுதான் உச்சநீதிமன்றத்தில் விசிக சார்பில் வலியுறுத்தினோம். ஏனைய மனுதாரர்களும் அதைத்தான் கோரியிருந்தனர். ஆனால், அதை உச்சநீதிமன்றம் ஏற்காமல் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுபோன்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
வக்ஃபு திருத்தச் சட்டத்தின் ஆபத்தான பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் வக்ஃபு சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜக அரசு செய்த முயற்சி தற்காலிகமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு முழுமையான தீர்வு அல்ல எனினும் இந்த அளவிலாவது உச்சநீதிமன்றம் நிவாரணம் வழங்கியதே என ஆறுதல் கொள்ளும் அதே நேரத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.