திருமாவளவன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Meenakshi
May 22, 2025,04:37 PM IST

திருநெல்வேலி: பாஜக-அதிமுக கூட்டணி உடைய வேண்டும் என திருமாவளவன் விருப்பப்படுகிறார். ஆனால், திருமாவளவன் திமுக கூட்டணியை  விட்டு வெளியே வரவேண்டும் என நான் விருப்பப்படுகிறேன் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலுக்கு சென்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு கிலோ வெள்ளியை தேர் திருப்பணிக்காக வழங்கியுள்ளார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 




நெல்லையப்பர் திருக்கோவிலில் தற்போது யானை இல்லை. கோயிலுக்கு யானை வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். பாஜக, அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவன் எண்ணம். திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம். ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே நடக்கும் பிரச்சனைக்கு பின்னால் பாஜக இல்லை.


2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்ற வில்லை.  சொத்து வரி உயர்வு. மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.  தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.