திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

Su.tha Arivalagan
Apr 08, 2026,04:52 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் பின்புறம் உள்ள சிக்கந்த மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாகச் சர்ச்சை நிலவி வருகிறது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வந்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தார். 


குறிப்பாக, கோயில் நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் சில முக்கியக் கருத்துக்களையும் ஆணைகளையும் வெளியிட்டிருந்தார்.




இரு நீதிபதிகள் அமர்வின் தலையீடு :


தனி நீதிபதியின் இந்த உத்தரவுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று (ஏப்ரல் 08, 2026) மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை ஒரு தனி நீதிபதி விசாரிக்க வேண்டுமா? அல்லது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டுமா? என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதுவரை, இந்த விவகாரத்தில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது."


பரபரப்பான சூழல் :


திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது என்பது பக்தர்களின் உணர்வுப்பூர்வமான விஷயமாகப் பார்க்கப்படும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. அரசின் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தடையை விதித்துள்ளனர். 


இந்த இடைக்காலத் தடையின் காரணமாக, திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான முந்தைய உத்தரவுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கின் அடுத்தகட்ட நகர்வு, இரு நீதிபதிகள் அமர்வின் இறுதி முடிவைப் பொறுத்தே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.