திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Meenakshi
Jul 03, 2025,04:49 PM IST

திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்தை போலீசார் தாக்கியபோது வீடியோ எடுத்த சத்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித்குமார். பக்தர் ஒருவரின் நகை காணாமல் போனதாக போலீசார் அடித்து சித்திரைவதை செய்து விசாரணை நடத்தியதில் அஜித்குமார் மரணம் அடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.


இதற்கிடையில், இளைஞர் அஜித்குமாரை போலீசார் கோயில் பின்புறம் வைத்து அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், அஜித்குமாரை தாக்கும் போலீசார் எந்தவித காவல் சீருடையும் அணியாமல் சாதாரண உடையில் அவரை சரமாரியாக தாக்கினர். அதுமட்டுமின்றி செருப்புடன் அஜித்குமாரை கடுமையாக உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. போலீசாரால் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்திருந்த சக்தீஸ்வரன் நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார்.




இந்த சூழலில், திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள் ஏற்கனவே தன்னை மிரட்டினர். தன்னை சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில், அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்த சத்தீஸ்வரனுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.