திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
- அ.கோகிலா தேவி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவின்போது, ஓய்வே இல்லாமல் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைப் பார்த்து கை கூப்பி வணங்கி நன்றி கூறினார். இது தூய்மைப் பணியாளர்களை மட்டுமல்லாமல் பொதுமக்களையும் கூட நெகிழ வைத்தது.
திருவண்ணாமலை உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வது வழக்கம்.
இத்தகைய நிகழ்வுகளின் போது பக்தர்கள் விட்டுச் செல்லும் குப்பைகள் கிரிவலப் பாதையில் மலைபோல் குவியும். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தூய்மைப் பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
கிரிவலத்திற்கு வந்த பக்தர்கள் விட்டுச் சென்ற பிளாஸ்டிக் குப்பைகள் உணவுப் பொட்டலங்கள் மற்றும் இதர கழிவுகளை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி தூய்மைப் பணியாளர்கள் மிக விரைவாகவும் திறமையாகவும் எந்தவித சோர்வுமின்றி உடனுக்குடன் அகற்றினர். இதனால் கிரிவலப் பாதை உடனடியாக தூய்மையடைந்து அடுத்தடுத்து வந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகவும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்தியது.
தூய்மைப் பணியாளர்களின் இந்த தன்னலமற்ற விரைவான பணியைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் .தர்ப்பகராஜ் மிகவும் நெகிழ்ந்துபோனார். தூய்மைப் பணியாளர்கள் அருகில் சென்று தன் இரு கைகளையும் கூப்பி அவர்கள் அனைவரையும் வணங்கினார். அவர்கள் ஆற்றிய உன்னதமான சேவைக்காக மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரே தங்களைக் கைகூப்பி வணங்கி பாராட்டியது தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற மனிதாபிமான சிறு சிறு செயல்கள்தான், மனிதத்தை எப்போதும் பூத்திருக்க வைக்கிறது. கலெக்டர் மட்டுமல்ல, மக்களும் கூட தூய்மைப் பணியாளர்களின் செயல்களுக்கு அவ்வப்போது இதுபோன்ற சிறுசிறு பாராட்டுக்களையும், புன்னகையையும் பரிசாக கொடுக்கலாம்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)