திருவேரகம்.. சுவாமி மலை முருகனுக்கே முன்னோடியான கோவில் ஒன்று இருக்கு தெரியுமா?
திருவேரகம் .. (திரு + ஏர் + அகம் = திருவேரகம்) இவ் ஊரின் பெயர் தேவர்களை காத்துள்ள முருகப்பெருமான் இப்பூவுலகில் மயில்வாகனத்தில் இறங்கி சிவபெருமானை பாசுபதாஸ்திரம் வேண்டி பூஜித்து அம்மையிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்து ஏரகம் திரும்புகையில் தேவர்கள் மனம் புகழ்ந்து பொன்முடி சூட்டினார்கள். ஆதலால் இங்கு முருகப்பெருமான் பொன்முடி சேவையில் அருள் பாலிக்கிறார்.
பின்பு உபதேசம் செய்த நிகழ்வு இங்கு நடந்தது. கந்தனிடம் உபதேசம் பெற்றதால் கந்தநாத சுவாமி எனவும் சுவாமிக்கு உபதேசம் செய்தமையால் சுவாமிநாதன் எனவும் பெயர் பெற்றார்
சங்கரனிடம் அம்மை உபதேசம் பெற்றதால் சங்கர நாயகி எனவும் அம்மை பெயர் பெற்றார். இத்திருத்தலம் அப்பர் சுவாமிகளால் தெய்வ வைப்புதலமாக பாடல் பெற்றது. நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், கடுக்கன் தியாகராஜ தேசிகர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் முருகப்பெருமானை பாடியுள்ளனர்.
இக்கோவில் விக்கிரம சோழ ராஜாவால் எடுத்துக்கட்டப்பட்டது. ஆதலால் இவ்வூர் மும்முடி சோழமங்கலம் எனவும் குமாரபுரம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு முருகப் பெருமானை அன்போடு வழிபட வாழ்வில் எவ்வித இடையூறின்றி சகலமும் பூர்த்தியாகும் என்பது ஐதீகம்.
ஆதி சுவாமிநாத சுவாமி கோவில் என்றும் இது அழைக்கப்படுகிறது. சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயிலுக்கு முன்பே கட்டப்பட்டதால் இந்தக் கோவில் ஆதி சுவாமிநாத சுவாமி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
வீடியோ: திருவேரகம் ஸ்ரீ ஆதி சுவாமிநாத சுவாமி கோவில்
கும்பகோணம் மேலக்காவிரி பாலத்தில் இறங்கி அப்படியே இடதுபுறம் சுவாமிமலை செல்லும் வழியில் மூப்பக்கோயில் எனும் இடத்தில் வலது புறம் திரும்ப வேண்டும். அந்த இடத்தில் ஸ்ரீ கந்தநாத சுவாமி திருக்கோயில் செல்லும் வழி என்று பெயர்ப்பலகை இருக்கும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் நேராகப் போனால் கோவிலை அடையலாம்.
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மற்றும் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். சுவாமிமலையிலிருந்து கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. திருச்சியிலிருந்து போனால் 94 கிலோமீட்டர் பயணித்து கோவிலை அடையலாம்.
செய்தி -புகைப்படம்: கும்பகோணம் ஜெயந்தி