மீண்டும் நீலகிரியில் வேட்டை .. 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியது!
- சரளா ராம்பாபு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கடந்த 4 மாதமாக ஆட்டம் காட்டி வந்த புலி சிக்கியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அவ்வப்போது வன விலங்குகளின் அட்டகாசம் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. அதுபோலத்தான் கடந்த 4 மாதமாக ஒரு புலி போக்கு காட்டி வந்தது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்து வந்தனர்.
கூடலூர் அருகே உள்ள தேவர் சோலா மற்றும் பாடந்துறை போன்ற பகுதிகளில் புலியின் அச்சுறுத்தல் நீடித்து வந்தது. 4 மாதங்களில் 13 மாடுகளை அந்தப் புலி வேட்டையாடி உள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. போக்கு காட்டி வந்த அந்தப் புலி தற்போது கூண்டில் சிக்கியது. இருந்தாலும் இது நான்கு மாதமாக போக்கு காட்டி வந்த பழைய புலியா அல்லது புதுப் புலியா என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்துள்ளது.
தொடர் புலி அச்சத்திற்கு ஏதாவது நிரந்தரமான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கையும் மக்களிடம் எழுந்துள்ளது.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)