2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்...திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடல்
திருப்பதி: 2026ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 03ம் தேதி நிகழ உள்ளது. இதன் காரணமாக மார்ச் 03ம் தேதியன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 மணி நேரம் நடைஅடைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மூடப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரகணம் முடிந்த பிறகு, கோயில் சுத்திகரிப்பு பணிகள் நடைபெறும். அதன் பிறகு, இரவு 8.30 மணிக்கு பக்தர்களுக்கான தரிசனம் மீண்டும் தொடங்கும்.
கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, "கோயில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும். கிரகணம் முடிந்த பிறகு, சுத்திகரிப்பு பணிகள் முடிந்ததும் பக்தர்களுக்காக மீண்டும் திறக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணம் சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மதியம் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை நிகழும்.
இந்த கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழக்கமாக நடைபெறும் அஷ்டதள பாத பத்மாராதனை (மலர்ப் பாத பூஜை), கல்யாணோற்சவம் (திருமண உற்சவம்), ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம் (ஊர்வலம்) மற்றும் சகஸ்ர தீபாலங்கார சேவை (விளக்கு அலங்கார சேவை) போன்ற பல முக்கிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் (TTD) கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நாளில் தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதற்கு ஏற்ப தங்களின் திருப்பதி பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.