தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: திமுக, தேமுதிக.,வின் கருத்து என்ன?

Su.tha Arivalagan
Aug 06, 2026,04:06 PM IST

சென்னை:தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.


"அமைச்சர் ஜால்ட்ரா அடித்துள்ளார்":

வேளாண் பட்ஜெட் குறித்துக் காரசாரமான கருத்துகளைத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக எதுவுமே இடம்பெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "இதனை வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதலமைச்சருக்கு வேளாண் அமைச்சர் வினோத் ஜால்ட்ரா அடித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும். இந்த பட்ஜெட்டில் புதிதாக என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை."


மேலும், விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, முதலமைச்சரைப் புகழ்வதிலேயே வேளாண் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளதாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். பயிர்கடன் முழுவதுமாக தள்ளுபடி என சொல்லி ஏமாற்றி விட்டனர் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார்.


பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் :




அதேபோல, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த வேளாண் பட்ஜெட் குறித்துத் தனது கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் மிக முக்கியத் தேவைகளுள் ஒன்றான சேமிப்புக் கிடங்குகள் குறித்த அறிவிப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டி அவர் பேசியுள்ளார்.


அவரது அறிக்கை விவரம்:


"வேளாண் பட்ஜெட்டில் வாசிக்கப்பட்ட அனைத்தும் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், செயல்வடிவம் பெற்றால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக, விவசாயிகளுக்கு மிகவும் அத்தியாவசியமான நெல் சேமிப்புக் கிடங்குகள் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இல்லாததை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்."


நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டை விமர்சித்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.