முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

Su.tha Arivalagan
Sep 07, 2026,11:22 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் திமுக மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியதைத் தொடர்ந்து, அவையில் கடும் அமளி ஏற்பட்டது. முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மறுப்புத் தெரிவிக்கவும், பதில் அளிக்கவும் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தரையில் அமர்ந்து திமுகவினர் தர்ணா:


சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் உரையாற்றிய போது, திமுக அரசு மற்றும் நிர்வாகிகள் மீதான விமர்சனங்களை அடுக்கடுக்காக முன் வைத்தார். இதைக் கண்டித்து, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.


சபாநாயகர் முன் திரண்ட திமுக எம்.எல்.ஏ-க்கள், "எங்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்" எனக் கூறி அவையின் தரையில் அமர்ந்து உடனடியாக தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகே கூடியிருந்த சில திமுக உறுப்பினர்கள், "முதல்வர் விஜய் தரப்பிலிருந்தே திமுகவினருக்கு பேச அனுமதி அளிக்குமாறு கேட்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.


"வாய்ப்பு கொடுங்கள்" – முதல்வர் விஜய் வலியுறுத்தல்:




திமுக உறுப்பினர்களின் தர்ணா மற்றும் கோரிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் விஜய்யும் சபாநாயகரிடம், "அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்" என்று நேரில் கேட்டுக் கொண்டார். இதனால் அவையில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.


வாய்ப்பை மறுத்த சபாநாயகர் – திமுக வெளிநடப்பு:


இருப்பினும், சட்டமன்ற நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர், முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். சபாநாயகர் அனுமதி வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். சட்டமன்றத்தில் நடந்த இந்நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.