2026 தமிழக சட்டமன்ற தேர்தல்...1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு

Su.tha Arivalagan
Jan 20, 2026,11:09 AM IST

சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கியக் கட்டமாக, மாநிலம் முழுவதும் பயன்படுத்தப்படவுள்ள சுமார் 1.75 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) முதற்கட்ட சரிபார்ப்புப் பணிகள் (First Level Checking - FLC) தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.


தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு இயந்திரங்களின் தரம் மற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாதுகாப்பான அறைகளில் (Strong Rooms) வைத்து இந்தச் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன.




இந்த ஆய்வின் போது இயந்திரங்களின் பொத்தான்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?, கட்டுப்பாட்டு அலகு (Control Unit) மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்பு சீராக உள்ளதா? வாக்களித்ததை உறுதி செய்யும் VVPAT இயந்திரங்கள் துல்லியமாகச் சீட்டுகளை அச்சிடுகின்றனவா? போன்றவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து வந்த பொறியாளர்களின் முன்னிலையில் சோதிக்கப்பட்டன.


தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. இயந்திரங்களின் சீல் வைக்கப்படும் முறை மற்றும் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர். முதற்கட்ட சரிபார்ப்பு முடிந்த இயந்திரங்கள் அனைத்தும் தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான காப்பகங்களில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இரண்டாம் கட்டமாக இந்த இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.