ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Su.tha Arivalagan
Jan 08, 2026,06:02 PM IST
சென்னை: தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே, தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரொக்கத் தொகையை உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், சில குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி முதலமைச்சர் இந்தத் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள்.



தமிழகத்தில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பணம் ரூ.3,000 உடன், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடைகள் (Ration Shops) மூலம் டோக்கன் முறையில் இந்தப் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் சென்று இந்தப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளைக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இந்த அறிவிப்பு தமிழக மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கான செலவுகளைச் சமாளிக்க இந்த ரூ.3,000 ரொக்கத் தொகை சாமானிய மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.