வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

Su.tha Arivalagan
Mar 14, 2026,04:59 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நிலவி வரும் எரிவாயு சிலிண்டர் கையிருப்பு நிலவரம் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் குறித்து அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.


எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் (Domestic LPG) இந்த மாதம் இறுதி வரை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கான போதிய கையிருப்பு உள்ளது. பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


இருப்பினும், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழலில், வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.




உணவகங்களுக்கு மின்சார மானியம் :


வணிக எரிவாயு விநியோகத்தில் உள்ள இந்த தற்காலிக கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, உணவகங்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு மின்வாரியம் ஒரு முக்கிய சலுகையை அறிவித்துள்ளது. இது குறித்து மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உணவகங்கள் தங்களின் சமையல் தேவைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தினால், அவர்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 ரூபாய் மானியம் (சலுகை) வழங்கப்படும்." என தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு விதித்துள்ள வணிக எரிவாயு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் வரை, மின்வாரியத்தின் இந்த 2 ரூபாய் மானியச் சலுகை தொடரும்.எரிவாயு தட்டுப்பாட்டினால் உணவகத் தொழில் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதும், மாற்று எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.