தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் அனலை கிளப்ப போகும் டாப் 10 பிரச்சனைகள்
சென்னை : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கலும் துவங்கி விடும். அதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் நேர்காணல் ஆகியவற்றை முடித்து, வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட வேண்டும். வேட்பாளர் பட்டியல் வெளியானதும் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிமுகம் செய்து, தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த துவங்கி விடுவார்கள்.
அனைவருக்கும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் பிரதான நோக்கம் என்பதால் ஆளும் திமுக.,விற்கு எதிரான முழக்கங்கள் தான் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெறும். அதே போல் திமுக, மத்தியில் ஆளும் கட்சியாகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சியுமான பாஜக.,விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் இருக்கும். அதோடு திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளையும் சொல்லி பிரச்சாரம் செய்வார்கள். எதிர்க்கட்சிகள் பிரச்சாரத்தில் மிக முக்கியமாக இடம்பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் டாப் 10 பிரச்சனைகள் குறித்து பார்ப்போம்.
பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்க போகும் பிரச்சனைகள் :
1. நீட் தேர்வு - திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற அறிவிப்பை அனைத்து எதிர்க்கட்சிகளும் கையில் எடுத்து பிரச்சாரம் செய்வார்கள். ஜென்சி வாக்காளர்களை கவருவதற்காக நிச்சயம் இந்த முழக்கத்தை முன் வைப்பார்கள்.
2. யார் அந்த சார்? - சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவ வழக்கில் குற்றவாளியான ஞானசேகரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்டாலும், அதில் முக்கிய புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் யார் அந்த சார் என்ற முழக்கம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதற்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை. அதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் இதை மீண்டும் கிளப்ப வாய்ப்புள்ளது.
3. பாலியல் சம்பவங்கள் - அண்ணா பல்கலைக்கழக மாணவி, கோவை கல்லூரி மாணவி, திருவண்ணாமலையில் தாய்-மகள், சிறுமிகள், பள்ளி மாணவிகள் என கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. போலீசாரே பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்து வருவதால் இதை மிக முக்கியமான சட்ட ஒழுங்கு சீர்கேடு பிரச்சனையாக எதிர்க்கட்சிகள் கிளப்ப வாய்ப்புள்ளது.
4. லாக்கப் மரணங்கள் - திருப்புவனம் அஜீத்குமார், மானாமதுரை ஆகாஷ் போன்ற லாக்கப் மரணங்கள் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியதால் இந்த விவகாரங்களையும் சட்டஒழுங்கு, நிரந்தர டிபிஜி இல்லாத பிரச்சனை ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் கிளப்ப உள்ளன.
5. போதை குற்றங்கள் - நாங்குநேரி சம்பவம் உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பது, அதனால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்திருப்பது என பல பிரச்சனைகளை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்லப்படும்.
6. கிட்னி திருட்டு விவகாரம் - நாமக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மீதான கிட்னி திருட்டு வழக்கில் கோர்ட் தலையிட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் படாதது பற்றி ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இது இந்த தேர்தலில் பெரிய அளவில் பேசப்படும்.
7. சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு - சமீபத்தில் ஏற்பட்டுள்ள கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்காக மத்திய அரசை திமுக.,வும், மாநில அரசு வழங்க வேண்டிய மானியத்தை தரவில்லை என எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுவார்கள்.
8. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் - கே.என்.நேரு, பொன்முடி போன்றவர்கள் மீதான முறைகேடு வழக்குகளை எதிர்க்கட்சிகள் மிக முக்கியமான பிரச்சனையாக எடுத்து பிரச்சாரம் செய்வார்கள்.
9.திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் - திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தை பாஜக பெரிய பிரச்சனையாக எடுத்து திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து பாஜக பேச வாய்ப்புள்ளது.
10. தூய்மை பணியாளர்கள் போராட்டம் - தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் நடத்திய போராட்டங்கள், அப்படி போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் மூலமாக அப்புறப்படுத்தப்பட்டது ஆகிய சம்பவங்களை மிக முக்கியமான பிரச்சனைகளாக எடுத்து எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்புள்ளது.