தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

Su.tha Arivalagan
Aug 10, 2026,05:06 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்து நியமிப்பதற்கான உயர் மட்ட 'மாநிலக் குழுவினை' அமைத்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது.


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் முதன்மை மற்றும் அதிக வருவாய் ஈட்டும் கோயில்களின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து உரிய பெயர்ப்பட்டியலைத் தயாரித்து வழங்கிடவும் இந்த மாநிலக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் ஆணைப்படி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசுச் செயலாளர் ஜெ.குமரகுருபரன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


ஆன்மீகம், நீதி மற்றும் திரைத்துறை பிரபலங்கள் இடம்பெற்ற குழு:

பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மாநிலக் குழுவின் முழுமையான உறுப்பினர் விவரங்கள்:




தலைவர்: தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் (பொம்மபுரம் ஆதீனம், மயிலம்)


துணைத் தலைவர்: டாக்டர் K. இராமநாதன் (ஓய்வுபெற்ற மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி)


உறுப்பினர்: திருமதி. அர்ச்சனா கல்பாத்தி அகோரம் (பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்)


உறுப்பினர்: திரு. ப.ரா.சம்பத், இ.ஆ.ப. (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி)


உறுப்பினர்: திருமதி. மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ (பிரபல ஆன்மீகப் பேச்சாளர்)


உறுப்பினர்: டாக்டர் த.வேல்முருகன் (பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர்)


பதவி வழி உறுப்பினர் / செயலாளர்: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்


குழுவின் பணிகளும் முக்கியத்துவமும்:

தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க பெரிய திருக்கோயில்கள் மற்றும் அதிக வருவாய் கொண்ட கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களை ஆய்வு செய்வதும், தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து அரசுக்கு வழிகாட்டுவதும் இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.


திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, பிரபல கிராமிய மற்றும் பின்னணிப் பாடகர் டாக்டர் வேல்முருகன், ஆன்மீகப் பேச்சாளர் சுமதிஸ்ரீ போன்ற பொதுவெளியில் அறியப்பட்ட முகங்களுடன், ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியையும் உள்ளடக்கி இக்குழு அமைக்கப்பட்டிருப்பது ஆன்மீக மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.


இந்தக் குழுவின் மூலம் திருக்கோயில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மையும், திறம்பட்ட செயல்பாடுகளும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.