மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
சென்னை : மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் பயணங்களை எளிதாக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சட்டமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். ஜெகதீஸ்வரி மாற்றுத்திறனாளிகளுக்காகப் பல முக்கிய மற்றும் வரவேற்கத்தக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் திட்டம் :
உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் தினசரி போக்குவரத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்கும் வகையில் அவர்களுக்குச் சிறப்பு வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. இதன்படி, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் பெட்ரோல் அல்லது மின்கலன்களால் (Battery) இயங்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர்கள் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமின்றி, தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் சுயதொழில் சார்ந்த பணிகளுக்காகவும் எளிதாகப் பயணிக்க முடியும்.
இலவச பேருந்து பயணத் திட்டம் விரிவாக்கம் :
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதிக்காக ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு, அத்திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது.
துணையாளருடன் பயணிக்க அனுமதி: தனித்துச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள், தங்களின் UDID (Unique Disability ID) அட்டையைப் பயன்படுத்தித் தங்களுடன் ஒரு துணையாளரையும் (Escort) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு பேருந்து சேவைகளில் கட்டணமில்லா பயணம்: மாநகர/நகர தாழ்தள பேருந்துகள் (Low-floor buses), விரைவு பேருந்துகள், டீலக்ஸ் பேருந்துகள், புறநகர் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதி பேருந்துகள் எனப் பல்வேறு வகையான அரசுப் பேருந்துகளிலும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனச் சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.