சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

Su.tha Arivalagan
Jul 04, 2026,12:43 PM IST

புதுச்சேரி: தன் சொந்த சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. இருந்தும் இன்று அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராகவில்லை. 


கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, புதுச்சேரி எழில் நகர் பகுதியில் வசித்து வரும் தமிழக நிதி அமைச்சர் மரியவில்சனின் உடன் பிறந்த தம்பியான மரியகிலோத் என்பவரது வீட்டிற்குள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், தம்பி மரியகிலோத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


அமைச்சர் மரியவில்சன் சிலவருடன் வந்து தனது சகோதரரை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகளும் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பரவியது. இந்தத் தாக்குதல் வழக்கு புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் தற்பொழுது விசாரணைக்கு வந்தது.




வழக்கை விசாரித்த நீதிபதி, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை (Charge Sheet) அமைச்சர் மரியவில்சன் நேரில் ஆஜராகிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, இன்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் அவர் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


அமைச்சர் ஆஜராகவில்லை :


இந்த மாதம் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரித்து பணிகள் இருப்பதை காரணம் காட்டி அமைச்சர் மரியவில்சன் இன்று புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  இதனால் அமைச்சர் மரியவில்சன் மீண்டும் மற்றொரு நாளில் ஆஜராக கோர்ட் அவகாசம் அளிக்குமா? அல்லது வேறு ஏதாவது உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.