Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

Manjula Devi
Apr 25, 2025,04:56 PM IST

சென்னை: 3935 பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப் 4 தேர்வு வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)  அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் குரூப் 1,குரூப் 2, குரூப் 4, தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தப் போட்டித் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுத் துறையில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுகள் மூலம் அரசு வேலையில் பணிபுரிய வேண்டும் என்பது ஒவ்வொரு இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் போட்டா போட்டி கொண்டு படித்து தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.அதே சமயத்தில் தேர்வு எழுதும் மாணவர்கள் சிரமம் இல்லாமல் படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்னும் நோக்கில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்வு தேதி தேதியை அறிவித்து வருவதும் வழக்கம். 




அதன்படி இத்தேர்வுகள் குறித்த அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் டிஎன்பிசி நிர்வாகம் முன்கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  இன்று வெளியிட்டுள்ளது.


அதன்படி, 3,935 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வுகள் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்மாக  அறிவித்துள்ளது. 


மேலும் குரூப்-4 தேர்வுக்கு இன்று முதல் அடுத்த மாதம், அதாவது மே 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக குரூப் 4 தேர்வுகள்  தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.