தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!
சென்னை: அன்புமணி சுற்றுப்பயணத்திற்கான 'உரிமை மீட்க... தலைமுறை காக்க...' இலட்சினையை வெளியிட்டது பாமக.
அன்புமணி ராமதாஸின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் வருகிற 25ம் தேதி தொடங்கி உள்ள நிலையில், அதன் முதல் கட்ட பயண விவரம் குறித்த தகவலை பாமக தலைமை நிலையம் இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக உரிமை மீட்க... தலைமுறை காக்க என்ற இலட்சினை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த இலட்சினையை மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இன்று காலை அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.