மீண்டும் மீண்டுமா?...தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து அதிரடி உயர்வு
சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக, தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்றும் (டிசம்பர் 24) புதிய உச்சத்தை எட்டியுள்ளன. தங்கம் விலை சவரனுக்கு ரூ.240ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100ம் அதிகரித்துள்ளன.ஏற்கனவே ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் சாமாணிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
அடுத்து வரும் திருமண சீசன் மாதங்களான தை, மாசி போன்ற மாதங்களில் திருமணம் வைத்திருப்பவர்கள் மார்கழி மாதத்தில் தங்கம் வாங்குவது வழக்கம். காரணம் மார்கழி மாதத்தில் பெரும்பாலும் திருமணம் போன்ற விசேஷங்கள் வைக்க மாட்டார்கள் என்பதால் இந்த மாதத்தில் தங்கத்தின் விலை கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கை. அதோடு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு அதிரடி சலுகைகளை நகைக் கடைகள் அறிவிக்க வாய்ப்புள்ளது என்பதாலும் மார்கழியில் தங்கம் வாங்குவதை சிலர் திட்டமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு மார்கழியிலேயே தங்கம் விலை இப்படி உயர்ந்தால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் திருமண சீசன் மாதங்களில் இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தைக் கடந்து வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒரு சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.
22 காரட் தங்கம் (1 கிராம்): ரூ.12,800.
22 காரட் தங்கம் (1 சவரன்): ரூ.1,02,400.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.நேற்றுடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில் (டிசம்பர் 1) ரூ. 1,96,000 ஆக இருந்த வெள்ளி விலை, தற்போது வரை சுமார் 19.44% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி (1 கிராம்): ரூ.234.10.
வெள்ளி (1 கிலோ): ரூ. 2,34,100.