12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 08, 2025... நல்ல காலம் பிறக்குது

Su.tha Arivalagan
Sep 08, 2025,10:17 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ம் தேதி, திங்கட்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், ஆவணி 23ம் தேதி திங்கட்கிழமை

மகாளய பட்சம் ஆரம்பம். உலக எழுத்தறிவு தினம். அதிகாலை 12.32 வரை பெளர்ணமி திதியும், பிறகு இரவு 10.52 வரை பிரதமை திதியும் அதற்கு பிறகு துவிதியை திதியும் உள்ளது. இன்று இரவு 10.20 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு இரவு 10.20 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : 01.45 முதல் 02.45 வரை ; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம். வழக்கு சாதகமாக முடியும். அரசு டெண்டர்களில் வெற்றி கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்பணம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கிடைக்கும். பெண் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். 


ரிஷபம் - இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து போவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். உடல் அழகு பெறும். சகோதர வழி உறவு மேம்படும். வியாபாரம் லாபம் தரும். 


மிதுனம் - திருமணப் பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பார்கள். வழக்கு சாதகமாக முடியும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். 


கடகம் - வாக்குவாதம் ஏற்பட்ட தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். பெண்கள் செலவுகளைச் சமாளிப்பார்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள் வருகை தருவார்கள். அவர்களால் நன்மை உண்டாகும். மகளின் திருமணத்தைப் பற்றி நல்ல முடிவெடுப்பீர்கள். 


சிம்மம் - இன்று சந்திராஷ்டமம் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது தடைகள் ஏற்படலாம். நேரமும் பணமும் விரயமாகும். இறைவனை பிரார்த்தனை செய்வது நல்லது. 


கன்னி - ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்ப வருமானத்தை அதிகரிக்க பகுதி நேர வேலையைத் தொடங்குவீர்கள். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறை படிப்பது நல்லது.


துலாம் -   சொந்தத் தொழிலைப் பற்றிய மனவருத்தம் நீங்கும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத சந்திப்பு நிகழும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பல வழிகளில் பணம் கிடைக்கும். காதலர்கள் பொறுப்புடன் இருப்பார்கள். வெளியில் செல்வதைத் தவிர்ப்பீர்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.


விருச்சிகம் - குடும்பத் தலைவிகளுக்கு வர வேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது. தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசம் ஆவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வார்கள். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள்.


தனுசு -  எதிர்பார்த்த செய்தி உங்களுக்கு சாதகமாகவே வரும். குறுகிய தூர பயணங்கள் அதிகரிக்கும். அந்தப் பயணங்கள் உங்களுக்கு நன்மையைத் தரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். தம்பதிகளிடையே மனக்கசப்பு தீரும்.


மகரம் - சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளைகளுக்குப் பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். 


கும்பம் -  இன்று பண வரவு தாமதப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பியவரை திருமணம் செய்வீர்கள். குடும்பத்துடன் பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கத்தினர் உதவுவார்கள்.


மீனம் - சுப காரிய பேச்சு வார்த்தையைத் தொடங்கலாம். வீட்டு உணவு சாப்பிடுவது நல்லது. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும். பிரபலங்கள் நண்பர்களாவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.