தேசிய கல்வி தினம் (National Education Day) இன்று!
- ஸ்வர்ணலட்சுமி
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ஆம் தேதி "தேசிய கல்வி தினம்" அனுஷ்டிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், சிறந்த கல்வியாளருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
அபுல் கலாம் ஆசாத்தின் தொலைநோக்கு மற்றும் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா தேசிய கல்வி தினத்தை கடைபிடிக்கிறது. கல்வி என்பது கல்விசார் சாதனைகள் மட்டுமல்ல விமர்சன சிந்தனை, புதுமை மற்றும் சமூகம் முன்னேற்றம் ஆகியவற்றை வளர்ப்பது என்பதை இந்நாளில் நாம் நினைவு கொள்வோமாக.
இந்த நாள் இந்தியாவின் கல்வி முறையை மேம்படுத்துவதும், தற்கால சவால்களை எதிர்கொள்ளவும், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக உறுதி செய்யவும் கொண்டாடப்படுகிறது.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் வாழ்க்கை வரலாறு:
நவம்பர் 11, 1888 இல் மக்காவில் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். இவர் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் தொலைநோக்கு தலைவர் ஆவார். இவரது குடும்பம் பின்னர் கொல்கத்தாவில் குடியேறியது. அங்கு தனது ஆரம்பக் கல்வியை,அரபு, பாரசீகம் மற்றும் இஸ்லாமிய இறையியல் ஆகியவற்றில் கல்வி கற்றார். பாரம்பரிய பின்னணியில் இருந்த போதிலும் ஆசாத் மேற்கத்திய தத்துவம், அறிவியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவருடைய முற்போக்கான உலக கண்ணோட்டத்தை இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு பத்திரிகையாளராகவும், சிந்தனையாளராகவும் விளங்கினார். அவர் 1912-ல் உருது வார இதழான அல்- ஹிலாலையும் பின்னர் அல்-பலாக்கையும் நிறுவினார். இவை செல்வாக்கு மிக்க தளங்களாக மாறின. இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் அபுல் கலாம் ஆசாத்தின் தீவிர பங்களிப்பு இவரை 1923 ல் இந்திய தேசிய காங்கிரஸின் இளைய தலைவராக ஆக்கியது.
பின்னர் மகாத்மா காந்தியின் நெருங்கிய சகா ஆனார். சுதந்திரத்திற்கு பிறகு மௌலானா ஆசாத் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் கல்வி, சமூக மாற்றம் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான கருவியாக இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார். நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி,வயது வந்தோர் எழுத்தறிவு, மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றை வலியுறுத்தினார்.
இந்திய கல்விக்கு மௌலானா ஆசாத்தின் பங்களிப்பு மகத்தானது. 1992 -ஆம் ஆண்டு மௌலானா ஆசாத்திற்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான "பாரத் ரத்னா "விருது அவருடைய மரணத்திற்கு பின் வழங்கப்பட்டது.
ஆசாத் அவர்களின் தொலைநோக்கு சாதாரண கல்விக்கு அப்பாற்பட்டது. அவர் கலாச்சாரம் மற்றும் இலக்கிய வளர்ச்சியை வலியுறுத்தினார். இந்திய மொழிகளை கற்பிக்கும் ஊடகங்களாக மேம்படுத்த பாடுபட்டார். இவரது முயற்சிகள் சாகித்ய அகாடமி,லலித்கலா அகாடமி மற்றும் சங்கீத நாடக அகாடமி ஆகிய நிறுவனங்களின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தன.இவை இன்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.
மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் நவீன இந்தியாவின் கல்விப் பின்னணியை வடிவமைத்ததில்,அவர் ஆற்றிய நிகரற்ற பங்களிப்பிற்காகவே இந்த நாள் நவம்பர் 11ஆம் தேதி "தேசிய கல்வி தினமா"க(National Education Day ) கொண்டாடப்படுகிறது.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.