வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ம் தேதி "தேசிய கட்டிப்பிடிப்பு தினம்" கொண்டாடப்படுகிறது. அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த இந்த நாள் உருவாக்கப்பட்டது.
கட்டிப்பிடித்தல் என்பது வெறும் அன்பு மட்டுமல்ல, அது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பதற்றத்தைக் குறைத்து, மனதிற்கு நிம்மதியைத் தருகிறது. மன அழுத்தம் இதனால் குறைகிறது.
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது நிம்மதியான தூக்கத்தைத் தரும். கட்டிப்பிடித்தலானது, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
நாம் ஒருவரை அணைக்கும்போது உடலில் 'ஆக்ஸிடாஸின்' எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது வலியை குறைத்து
மகிழ்ச்சியைத் தருகிறது.
பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இந்த தொடுதல், கட்டிப்பிடித்தல், அரவணைத்தல் தேவைப்படுகிறது. அன்பின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமும் தொடர்புடையது இது.
இதற்காகவே ஒரு நாளைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளை 1986-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் கெவின் சபோர்னி என்பவர் தொடங்கினார். இது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தினமாகும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இன்றைய அவசர உலகில், நம் குழந்தைகளையும் குடும்பத்தினரையும் கட்டிப்பிடித்து அன்பு காட்ட நாம் தவறிவிடுகிறோம். தாத்தா, பாட்டி தங்கள் பேரக் குழந்தைகளை அணைக்கட்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அரவணைப்பைத் தரட்டும். சகோதர, சகோதரிகள் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ளட்டும்.
இந்த நாளில் உங்கள் அன்புக்குரியவர்களை ஒருமுறை கட்டிப்பிடித்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்!
வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் வந்த பிறகுதான் பலருக்கும் இந்த கட்டிப்பிடி வைத்தியமே தெரிய வந்தது. இன்று அதற்கான நாள், ஸோ உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு உங்களால் முடிந்த அன்பையும், பாசத்தையும், கட்டிப்பிடி மூலம் கொடுத்து அரவணையுங்கள்.