வைகாசி சோமவார அமாவாசை..கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வந்திருப்பது சிறப்பு
- ஸ்வர்ணலட்சுமி
சோமவார அமாவாசை 26. 5. 2025 அன்று சோமவார அமாவாசையில் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்திருப்பது அதிக சிறப்பான நாள்.
மாதவ மாதம் என்று அழைக்கப்படும் வைகாசி மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை ஆன இன்று சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள்.
நேரம் :மே 26ஆம் நாள் அமாவாசை திதி காலை 11:30am முதல் மே 27 செவ்வாய்க்கிழமை 9: 10am வரை உள்ளது. அமாவாசை திதியில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் காலை 11 மணிக்கு மேல் கொடுப்பது சிறப்பு.
இந்த நாள் வ ட் சாவித்திரி விரதம் மற்றும் சனி ஜெயந்தி இரண்டும் கொண்டாடப்படுகிறது. வைகாசி அமாவாசை சனி ஜெயந்தியின் மங்களகரமான சந்தர்ப்பத்துடன் ஒத்துப்போகிறது.
ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடும், முன்னோர்கள் வழிபாடும் செய்வதன் மூலம் நல்ல அருள் பெற இயலும் என்பது அனைவரும் அறிந்ததே. அமாவாசைகளில் மிகச் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக திகழ்வது ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகும் .அந்த வரிசையில் வைகாசி அமாவாசையும் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாள் திங்கட்கிழமை அமாவாசையும் சேர்ந்து சோமவார அமாவாசையாக வந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்.
விஷ்ணு புராணத்தில் இந்த மாதவ மாதமான வைகாசி மாதத்தில் புனித நதியில் நீராடி துளசி இலைகளால் விஷ்ணுவை வணங்குவது செழிப்பு மற்றும் ஆசிகளுக்கு வழிவகைக்கிறது. அமாவாசை நாளில் வீடுகளில் முன்னோர்களுக்கு படையல் போட்டு சிலர் வழிபாடு செய்வார்கள். படையலில் சாதம், பருப்பு, காய்கறி வகைகள், சிலர் அகத்திக்கீரை சமைப்பர், வடை ,பாயாசம் என்று அவரவர் குடும்ப வழக்கப்படி படையல் போடுவது வழக்கம்.
வீட்டில் விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் பூஜை முடிந்த பின் காக்கைக்கு சிறிய படையல் வைத்துவிட்டு அவர்கள் விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.
அமாவாசை யான இன்று தர்ப்பணம் செய்த பிறகு சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு செல்வது நன்மைகளைத் தரும் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. மேலும் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது நன்மை பயக்கும் .பச்சை அரிசி மற்றும் வெல்லம் கொடுப்பது அதிலும் நன்மை பயக்கும்.
இந்த நாள் தான தர்மங்கள் செய்ய உகந்த நாள். சோமவார அமாவாசையான இன்று வழிபாடு செய்வதினால் நீள் ஆயுள் ,நிறை செல்வம், உயர் புகழ் ,மன அமைதி குடும்ப அமைதி, கிடைக்கப்பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள் ஸ்வர்ணலட்சுமி